

கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்கள் சிலர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இது தொடர்பாக கோகினூர் மஜும்தார், ரிஜு தத்தா மற்றும் கார்த்திக் கோஸ் ஆகியோருக்கு கட்சித் தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததாலும், தொடர்ச்சியாகக் கட்சி விதிகளுக்கு மாறாகச் செயல்பட்டதாலும் அவர்கள் மூவரும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கட்சித் தலைமையின் அணுகு முறை மற்றும் தேர்தல் வியூகங்கள் தோல்வியடைந்ததாக இந்த 3 பேரும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், "கட்சியின் உள்விவகாரங்கள் குறித்துப் பொது வெளியில் பேசுவது ஒழுங்கு நடவடிக்கை மீறலாகும். கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செய்தித் தொடர்பாளர்கள் மீதான இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.