

புதுடெல்லி: மணிப்பூரில் குகி - நாகா சமூகத்தினர் மோதலால் முடக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளைத் திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் குகி - நாகா ஆகிய பழங்குடியின சமூகத்தினர் இடையிலான மோதல் காரணமாக, காங்போக்பி மாவட்டம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலைகளைத் திறக்க உத்தரவிடக் கோரி ‘குகி பெண்கள் மனித உரிமைகள் அமைப்பு’ தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, “நெடுஞ்சாலைகள் முடங்கியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். சாலைகளை முடக்குவது யாருக்கும் பயனளிக்காது. இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதை விடுத்து, நெடுஞ்சாலைகளைத் திறப்பதற்கான நடைமுறைத் தீர்வை முன்வைக்க வேண்டும்.
வலுக்கட்டாயமாக சாலைத் தடுப்புகளை அகற்ற முயன்றால் அது மீண்டும் வன்முறைக்கு வழிவகுக்கக்கூடும். தற்போது முடக்கப்பட்டுள்ள சாலைகளின் விவரங்களையும், அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.