

புதுடெல்லி: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து, சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான நீதி உரிமைகள் கூட்டமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "போக்சோ சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி, குழந்தைகளின் ஆபாச படங்கள், அவர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் கொண்ட உள்ளடக்கங்கள் குறித்து சமூக வலைதளங்கள் கட்டாயமாகப் புகாரளிக்க வேண்டும். குறிப்பாக, சிறார்களுக்கான சிறப்பு காவல் பிரிவுக்கோ அல்லது உள்ளூர் காவல் துறையினரிடமோ புகாரளிக்க வேண்டுமென்று, உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ல் தீர்ப்பளித்தது.
ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும், அந்தத் தீர்ப்பு உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. எனவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளடக்கம் குறித்து புகார் அளிக்கத் தவறும் சமூக வலைதளங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல், கட்டாயமாக புகாரளித்தல், மின்னணு ஆதாரங்களைப் பாதுகாத்தல், விசாரணை முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.
அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.