

மேனகா குருசாமி
புதுடெல்லி: மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 37 இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் தன்பாலின ஈர்ப்பாளருமான (எல்ஜிபிடிக்யூ) மேனகா குருசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் பாபுல் சுப்ரியோ, டோலிவுட் நடிகை கோயல் மல்லிக் மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற மேற்கு வங்க காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ராஜீவ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மேனகா குருசாமி வெற்றி பெற்றால் நாட்டின் முதல் எல்ஜிபிடிக்யூ நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரலாறு படைப்பார்.
மேனகா குருசாமி ஒரு அரசியலமைப்புச் சட்ட வல்லுநர் மற்றும் இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். அவர் 1997-ம் ஆண்டு முன்னாள் அட்டர்னி ஜெனரல் அசோக் தேசாயின் கீழ் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். மேனகா தனது ஆரம்பக் காலங்களில் வழக்குகள் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களில் முக்கியமாகப் பணியாற்றினார்.
பின்னர் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர்ந்த அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிசிஎல் பட்டமும், ஹார்வர்டு சட்டப் பள்ளியில் முதுகலை சட்டப் பட்டமும் பெற்றார். நியூயார்க்கில் உள்ள ‘டேவிஸ் போல்க் & வார்டுவெல்' நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2015-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல், கொலம்பியா மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகங்களில் கவுரவப் பேராசிரியராக மேனகா பணியாற்றியுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி நிதியம் மற்றும் சிறுவர் நிதியமான யுனிசெஃப் ஆகியவற்றுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்தியாவில், பிரிவு 377-ஐ (தன்பாலின சேர்க்கையை குற்றமாகக் கருதும் சட்டம்) எதிர்த்து வாதிட்ட சட்டக் குழுவில் மேனகா முக்கியப் பங்கு வகித்தார். அதிகாரத்துவ சீர்திருத்தங்கள், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு, சல்வா ஜூடும் வழக்கு மற்றும் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான பல முக்கிய வழக்குகளிலும் அவர் வாதாடி உள்ளார்.