

திருப்பதி: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரி மாதத்தில், மாட்டூரி சுப்பாராவ் எனும் பக்தர், 461 கிராம் எடையில், வைர கிரீடத்தை சுவாமிக்கு காணிக்கை வழங்கினார். இதன் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கோயிலுக்கு சென்ற மாட்டூரி சுப்பாராவ், சுவாமிக்கு வைர கிரீடத்தை சூட்டி அழகு பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால், அது வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. ஒவ்வொரு முறையும் இதே பதிலை சொன்னதால் சந்தேகம் அடைந்த சுப்பாராவ் இந்து சமய அறநிலைத் துறையில் முறையிட்டுள்ளார். அதன்பேரில், நேற்று உதவி ஆய்வாளர் லலிதா கோயிலில் விசாரணை நடத்தினார். அப்போது அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரும் ஊரில் இல்லை என கூறியுள்ளனர்.
எனவே, நன்கொடையாளரிடம் வைர கிரீடம் குறித்து தகவல்களை சேகரித்தார். தற்போது அந்த கிரீடம், கோயில் மராமத்து பணிகளுக்காக ஒரு அடகு கடையில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதலால், அந்த அடகு கடைக்காரருக்கும் தற்போது அடுத்த விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டுமென நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.