யார் இந்த வி.டி.சதீசன்? - ‘துல்லியத் தாக்குதல் அரசியல்’ முதல் கேரள முதல்வர் பதவி வரை!

யார் இந்த வி.டி.சதீசன்? - ‘துல்லியத் தாக்குதல் அரசியல்’ முதல் கேரள முதல்வர் பதவி வரை!
Updated on
4 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தின் அடுத்த முதல்வராக வி.டி.சதீசன் தேர்வாகி உள்ளார். இந்நிலையில், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.

நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸின் முக்கிய கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இக்கூட்டணி ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 71 இடங்களைவிட கூடுதலாக 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்தி ஆட்சி அமைப்பதற்கான அதிகாரத்தை ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றிய போதிலும், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால் ஆகியோருக்கு இடையே போட்டி கடுமையாக இருந்த நிலையில், இதில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பது காங்கிரஸ் தலைமைக்கு அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. இந்நிலையில்தான், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக, அதாவது மாநிலத்தின் முதல்வராக வி.டி.சதீசன் நியமிக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை நேற்று (மே 14) அறிவித்தது. இதையடுத்து, கேரளத்தின் முதல்வராக மே 18-ம் தேதி பதவியேற்க இருக்கிறார் வி.டி.சதீசன்.

யார் இந்த வி.டி. சதீசன்?

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நெட்டூரில் 1964-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி பிறந்தவர் வடசெர்ரி தாமோதர சதீசன். தாமோதர மேனன் - விலாசினி தம்பதியரின் மகனான இவர், தனது ஆரம்பக் கல்வியை பனங்காடு உயர்நிலைப் பள்ளியிலும், இளங்கலைப் படிப்பை தேவராவில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரியிலும், சமூகப் பணியில் முதுகலைப் பட்டத்தை ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியிலும் பயின்றார்.

தொடர்ந்து, வி.டி.சதீசன், கேரள சட்ட அகாடமி சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பையும், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முதுகலைச் சட்டப் படிப்பையும் நிறைவு செய்தார். தொடர்ந்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக திறம்பட பணியாற்றினார்.

வி.டி. சதீசனின் அரசியல் பயணம்:

கல்லூரி மாணவராக இருக்கும்போதே இவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் படிக்கும்போதே, கல்லூரி சங்கத்தின் பொறுப்பாளராக பணியாற்றிய வி.டி.சதீசன், பின்னர் எம்ஜி பல்கலைக்கழக சங்கத்தின் தலைவராக தேர்வானார். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மாணவர் இயக்கமான என்எஸ்யுஐ-ல் தேசிய செயலராக பணிபுரியத் தொடங்கினார்.

பரவூரில் தொடங்கிய தேர்தல் வாழ்க்கை:

பரவூருக்கும் வி.டி. சதீசனுக்கும் இடையேயான பந்தம் கால் நூற்றாண்டுக்கும் மேலானது. இடதுசாரிகளின் வலிமையான பகுதியாக இருந்து வந்த பரவூர் தொகுதியில் 1996-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.டி.சதீசன், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ராஜுவிடம் 1,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த தோல்வி அவருக்கு பெரும் வலியைத் தந்தாலும், தொகுதி மக்கள் மீதான அவரது நம்பிக்கை சிறிதும் குறையவில்லை. தொகுதி மக்கள் மீதான தனது தொடர்பை ஆழப்படுத்தினார். மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பாடுபட்டார். வசீகரமான அந்த இளைஞரின் உழைப்பு தொகுதி மக்களிடையே ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

2001-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார் வி.டி.சதீசன். இம்முறை, முன்பு தன்னை தோற்கடித்த பி.ராஜுவை 7,434 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார் சதீசன்.

மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயல்படுபவராகவும், மக்களோடு மக்களாக பழகுபவராகவும் இருந்த வி.டி.சதீசனை தொகுதி மக்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டனர். இதன் காரணமாக, 2006, 2011, 2016, 2021, 2026 என தொடர்ந்து ஆறு தேர்தல்களில் அவரை வெற்றி பெற வைத்தனர் பரவூர் தொகுதி மக்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை தோற்கடித்தார் வி.டி.சதீசன். 2006-ல் 7,792 வாக்குகள் வித்தியாசத்திலும், 2011-ல் 11,349 வாக்குகள் வித்தியாசத்திலும், 2016-ல் 20,634 வாக்குகள் வித்தியாசத்திலும், 2021-ல் 21,301 வாக்குகள் வித்தியாசத்திலும், 2026-ல் 20,600 வாக்குகள் வித்தியாசத்திலும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை தோற்கடித்தார் வி.டி.சதீசன்.

வளர்ச்சியும் பின்னடைவும்:

தேர்தலில் தொடர் வெற்றியை பெற்ற போதிலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது பெரும் சவாலாகவே இருந்தது. மணப்பெண்ணாக அல்லாமல், மணப்பெண்ணின் தோழியாகவே இருப்பவர் என காங்கிரஸ் கட்சியினர் அவரை கிண்டல் செய்வதுண்டு.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கத்தின் தலைவர் பதவி, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி, கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி, 2011-ல் அமைச்சர் பதவி என அவர் தவறவிட்ட பதவிகள் ஏராளம். கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டுவதில்லை; என்ன செய்வது என அவரே வருந்தி இருக்கிறார். எனினும், அவர் அவசரப்படாமல், தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்தார். கட்சி மீதான தனது விசுவாசத்தை அவர் ஒருபோதும் குறைத்துக்கொள்ளவில்லை. அதற்கான பலனும் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கத் தொடங்கியது.

கேரள சட்டப்பேரவையின் பொதுக் கணக்கு கமிட்டி தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர், தமிழ்நாடு காங்கிரஸுக்கான மேலிட பொறுப்பாளர், கேரள காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.

காங்கிரஸ் மூத்த தலைவரான உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார் வி.டி.சதீசன். இதன் தொடர்ச்சியாக, 2021-ல் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தபோது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார் வி.டி.சதீசன்.

புள்ளி விவரங்களால் திணறடித்த வி.டி.சதீசன்:

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கடந்த 5 ஆண்டு காலத்தில் சதீசன் ஆற்றிய பணியை எளிமையாகவும் சுருக்கமாகவும் குறிப்பிட வேண்டுமானால் ‘தரவு துல்லியம்’. தரவுகள் மீதுதான் அவரது கவனம் எப்போதும் இருந்து வந்துள்ளது. பினராயி விஜயன் அரசின் தவறுகளை, குறைகளை அவர் புள்ளி விவரங்களைக் கொண்டே சாடினார். இவை இடதுசாரிகள் மீதான துல்லியத் தாக்குதல்களாக அமைந்தன. சதீசனின் இந்த அணுகுமுறை, அவருக்கு உள்ள தலைமைப் பண்பை வெளிச்சம் போட்டு காட்டி புகழைக் கூட்டியது.

கோஷ்டி அரசியலில் ஈடுபடாமல், பிரச்சினைகளின் அடிப்படையில் நிலைப்பாடுகளை எடுப்பவராக வி.டி.சதீசன் அறியப்படுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து பணியாற்றிய போதிலும் அவரது அணுகுமுறை மாறவில்லை. அதோடு, குறிப்பிட்ட பணியை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் முடிப்பது, பொறுப்பேற்பது, அமைப்பின் ஒழுங்கு முறைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது என்ற பண்புகளும் அவர் மீதான கவனத்தை அதிகப்படுத்தியது. இதன் காரணமாக, மிகவும் திறமையான காங்கிரஸ் தலைவர் என்ற பெயரை கட்சிக்குள்ளும் வெளியிலும் வி.டி.சதீசன் எடுத்தார்.

வி.டி.சதீசன் எதிர்க்கட்சித் தலைவரான பிறகு இடதுசாரிகள் பலவீனமடையத் தொடங்கினர். 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களைக் கைப்பற்றியது. 2025-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்தது. அதோடு, திரிக்ககாரா, புத்துபள்ளி, நிலம்பூர் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் தனது வலிமையை நிரூபித்தது. இடது ஜனநாயக முன்னணி அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதிலும், முதல்வர் பினராயி விஜயனுக்கு சவால் அளிப்பதிலும் காங்கிரஸின் ஒற்றை முகமாகத் திகழ்ந்தார் வி.டி.சதீசன். இதன்மூலம் அவர் தனது நிலையை வலிமையாக தக்கவைத்துக்கொண்டார்.

இந்த பின்னணியில்தான் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இம்முறை நமது கூட்டணி 100 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் என கூறினார் சதீசன். அது அப்படியே நடந்தது.

போட்டியாளர்களின் வலிமை:

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு வி.டி.சதீசனின் பங்கு குறிப்பிடத்தக்கது என்ற போதிலும், அவருக்கு கட்சிக்குள் வலிமையான போட்டியாளர்கள் இருந்தனர். ரமேஷ் சென்னிதாலா இதில் மிக முக்கியமானவர். 28 வயதிலேயே கேரள அமைச்சரானவர் அவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் / வகிப்பவர். மற்றொரு முக்கிய போட்டியாளர் கே.சி.வேணுகோபால். எப்போதும், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் வலம்வரக்கூடிய அளவுக்கு மேலிட செல்வாக்கு மிக்கவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர். இவர்களுடன்தான் வி.டி.சதீசனுக்கு போட்டி இருந்தது.

எனினும், களத்தில் இருக்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலான செல்வாக்கு, முக்கிய கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஆதரவு, கட்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் ஆகியவை அவரது தேர்வை உறுதிப்படுத்தி உள்ளன. கே.கருணாகரன், ஏ.கே.அந்தோணி, உம்மன் சாண்டி ஆகியோரின் வரிசையில் கேரளாவின் அடுத்த காங்கிரஸ் முதல்வராக தேர்வாகி உள்ளார் வி.டி.சதீசன்.

யார் இந்த வி.டி.சதீசன்? - ‘துல்லியத் தாக்குதல் அரசியல்’ முதல் கேரள முதல்வர் பதவி வரை!
பிரதமர் மோடியின் 2 மணி நேர யுஏஇ பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in