

புதுடெல்லி: கருவில் பாலினத்தைக் கண்டறியும் வழக்குகளில் காவல் துறை நேரடியாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது, கடந்த 2017-ம் ஆண்டு அம்மாநில தாசில்தார் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கே. சிங் அடங்கிய அமர்வு தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
பாலினத் தேர்வு தடைச் சட்டத்தின் கீழ் காவல் துறை முதன்மை விசாரணை அமைப்பாகச் செயல்பட முடியாது.
இந்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அதிகாரி மட்டுமே புகார் அளிக்கவோ விசாரணை நடத்தவோ முழு அதிகாரமும் படைத்தவர் ஆவார்.
மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த வழக்குகள் என்பதால், இவற்றை நேரடியாகக் கையாள காவல் துறை முதன்மை அமைப்பு அல்ல. சட்டப்பூர்வ அதிகாரி உதவி கோரும்பட்சத்தில் மட்டுமே காவல் துறை ஒரு துணை அமைப்பாகச் செயல்பட முடியும்.
காவல் துறை தாக்கல் செய்யும் இறுதி குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வழக்கு விசாரணையை மேற்கொள்ள முடியாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.