

மருத்துவப் படிப்புக்கான நீட் மறுதேர்வு நடைபெறுவதையடுத்து, டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. அது மட்டுமல்லாமல் வரும் 30-ம் தேதி வரை டெலிகிராம் செயலியில் ஏற்கெனவே பகிர்ந்த எந்த தகவல்களையும், கருத்துகளையும் பயனாளிகள் திருத்துவதற்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த தற்காலிக தடையானது வாட்ஸ்அப் செயலிக்கு விதிக்கப்படாததற்கான காரணத்தைப் பார்ப்போம்.
டெலிகிராம் செயலிக்கு தடை ஏன்?
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடந்தது. இந்தத் தேர்வை ஏறக்குறைய 22 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஆனால், கடந்த மாதம் 10-ம் தேதி ராஜஸ்தானில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் தேர்வு நடத்திய தேசியத் தேர்வு முகமை( என்.டி.ஏ) அறிவித்தது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணையும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீட் மறுதேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நாடு முழுவதும் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கேள்வித்தாள் மிகுந்த பாதுகாப்புடன் தேர்வு நடக்கும் நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில்தான் தேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு என்டிஏ பரிந்துரை செய்தது.
நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், தேர்வு நேர்மையாக நடப்பதை உறுதி செய்யவும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதன்படி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69ஏ 2000-ன் கீழ் மத்திய அரசு தடை விதித்தது என என்டிஏ தெரிவித்துள்ளது.
என்டிஏ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “டெலிகிராம் செயலியில் கடந்த காலங்களில் வெளியான வினாத்தாள்களை மாற்றம் செய்து போலியாக நீட் வினாத்தாள் மற்றும் விடைகள் பகிரப்பட்டு வருகிறது. இது மாணவர்களிடையே பெரிய குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. சமூக விரோதிகள் சிலர் மாணவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் இதுபோன்ற போலியான வினாத்தாள்களையும், விடைகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அதனால் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடு?
டெலிகிராம் செயலிக்கு இம்மாதம் 22-ம் தேதி வரை, அதாவது நீட் தேர்வு நடந்து முடிந்த மறுநாள் வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் டெலிகிராம் செயலியின் பயனாளிகள் ஏற்கெனவே செயிலியில் பதிவு செய்திருந்த எந்தவிதமான கருத்துகளையும் திருத்தவோ, மாற்றவோ இம்மாதம் 30-ம் தேதி வரை தடை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெலிகிராம் மட்டும் ஏன்?
நாடு முழுவதும் டெலிகிராம் சேனலை ஏறக்குறைய 15 கோடி முதல் 20 கோடி பயனாளிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், வாட்ஸ்அப் செயலிக்கு இருப்பது போன்ற கட்டுப்பாடுகள், குரூப் அட்மின், எங்கிருந்து இயக்கப்படுகிறது போன்ற நம்பகத்தன்மையான தகவல்கள் இல்லை. யார் வேண்டுமானாலும் டெலிகிராமில் வரும் செய்திகளை திருத்தவும், மாற்றவும் முடியும், ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழ் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் உறுப்பினர்களாக இணையலாம், அடையாளம் தெரிவிக்கத் தேவையில்லை என்பது ஆபத்தானதாக இருப்பதாக மத்திய அரசு கருதுகிறது.
டெலிகிராம் செயலியில் இருக்கும் ‘மெசேஜ் எடிட்டிங்’ வசதி கவலைக்குரிய அம்சமாகும். நீட் வினாத்தாள் குறித்து கடந்த காலத்தில் வெளியான வினாத்தாளை மாற்றம் செய்து, விடைகளை உருவாக்கி வதந்திகளை பரப்பிவிட முடியும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விவரிக்கிறார்கள்.
குறிப்பாக, இதுபோன்ற உண்மைக்கு மாறான செய்திகளை பரப்புவதிலும், யார் பரப்புகிறார்கள், எங்கிருந்து பகிரப்படுகிறது என்பதில் டெலிகிராமில் எந்தத் கட்டுப்பாடுகளும் இல்லை. செய்திகளை அனுப்புபவர், பெறுபவருக்கும் இடையே எந்தவிதமான நேரடித் தொடர்பும் இல்லாமல் இருப்பதால் போலிச் செய்தி வேகமாகப் பரவும் ஆபத்து இருப்பதால் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், டெலிகிராமில் பயனாளிகள் பலரும் தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து, போலியான பெயரில் கணக்கு வைக்க முடியும். இதனால் போலி செய்தி எங்கிருந்து, எந்த இடத்தில் இருந்து பரப்பப்படுகிறது என்பதை கண்டறிவது கடினம் என்பதால், டெலிகிராமுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலிக்கு ஏன் தடை இல்லை?
டெலிகிராம் செயலி போன்று வாட்ஸ்அப்பிலும் நீட் போலி வினாத்தாள் பரப்ப முடியும் என்றாலும், அதன் வீச்சு அளவு குறைவு, கட்டுப்பாடுகள் அதிகம். அரசின் விதிகளுக்கு உட்பட்டும், கட்டுப்பாடுகளுக்கு பணிந்தும் மெட்டா நிறுவனம் செயல்படுவதால், வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை 5 நபருக்கு மேல் ஒரே நேரத்தில் அனுப்ப முடியாத கட்டுப்பாடு, ஒரு செய்தியை ஒரு நபருக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாத கட்டுப்பாடு, தானாகவே அழிந்துவிடும் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு வசதிகளால் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாக மத்திய அரசு கருதுகிறது.
அது மட்டுமல்லாமல் வாட்ஸ்அப்பில் ஏதேனும் போலியாக செய்திகள் பரவும் பட்சத்தில், அதை பரப்பியவர் யார், எங்கிருந்து பரப்பப்பட்டது, எந்த நேரத்தில் செய்தி உருவாக்கப்பட்டது என்பதை கண்டுபிடிப்பது மத்திய அரசுக்கு எளிதாகும்.
மேலும், செல்போன் எண்ணுடன் வாட்ஸ்அப் இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் பாதுகாப்பாகும். டெலிகிராம் போன்று, பப்ளிக் சேனல்கள் வாட்ஸ்அப்பில் இல்லை என்பதாலும், பெரிய அளவிலான அடையாளம் தெரியாத பயனாளிகள் உறுப்பினராக இருக்க முடியாது என்பதால் வாட்ஸ்அப்புக்கு கட்டுப்பாடு இல்லை.
அது மட்டுமல்லாமல், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, மத்திய அரசு விதிமுறைக்கு உட்பட்டு குறை தீர்க்கும் அதிகாரிகளை நியமித்து, புகார்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டும், அரசு சட்டப்பூர்வமாக கேட்கும் வேண்டுகோள்களுக்கும் தேவையான விவரங்களை வழங்குகிறது.
வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் தகவல்களை பாதுகாப்பானவையாக கருதப்பட்டாலும், அரசுக்கு தேவைப்படும் பட்சத்தில் விசாரணைக்காக வழங்கப்படும் வசதியும் இருப்பதால் வாட்ஸ்அப் செயலிக்கு கட்டுப்பாடு இல்லை.