

மெல்போர்ன்: பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சாதனையாக, ஆஸ்திரேலியாவிடம் இருந்த மூன்று தொன்மையான இந்திய சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
மீட்கப்பட உள்ள அந்த சிலைகள் பின்வருமாறு:
* திரிசூல மங்கள காளி (பத்ரகாளி): திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமம் கைலாசநாதர் கோயிலைச் சேர்ந்த 46 செ.மீ. உயரம், 29 செ.மீ. அகலம், 55 செ.மீ. விட்டம் உள்ள சிலை.
* நந்தி: அதே கோயிலைச் சேர்ந்த 80.5 செ.மீ. உயரம், 110.5 செ.மீ. அகலம், 55 செ.மீ. விட்டம் உள்ள சிலை.
* சுப்பிரமணியர் (ஆறுமுகப் பெருமான்): தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா மானம்பாடி கிராமம் நாகநாத சுவாமி கோயிலைச் சேர்ந்த 130 செ.மீ. உயரம், 110 செ.மீ. அகலம், 40 செ.மீ. விட்டம் கொண்ட சிலை. சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த சிலைகள் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்தவை ஆகும். பிரதமர் மோடியின் முயற்சியால் இவை தற்போது தாயகம் திரும்புகின்றன.