கரூர் வழக்கு: முதல்வர் விஜய்க்கு எதிராக இடையீட்டு மனு தாக்கல் செய்த திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

கரூர் வழக்கு: முதல்வர் விஜய்க்கு எதிராக  இடையீட்டு மனு தாக்கல் செய்த திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
Updated on
2 min read

புதுடெல்லி: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பேச தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்தது. இதையடுத்து, மனுவை திரும்பப் பெற விரும்புவதாக திமுக தெரிவித்தது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதல்வர் விஜய் வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தமிழக அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா, ‘கரூரில் ஒரு கணக்கு வழக்கு உள்​ளது. அதை முடிக்​காமல் விட​மாட்​டோம். இதற்குப் பதிலடி கொடுக்​கப்​படும். சட்​டம் தன் கடமையைச் செய்​யும்’ என்​று பேசி உள்​ளார். அவரது பேச்சு புலன் விசா​ரணை​யில் தலை​யிடு​வ​தாக உள்​ளது.

இதற்கிடையே, ஜூலை 10-ம் தேதி முதல்​வர் விஜய் கரூர் சென்று கூட்​டத்​தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்​கான உத்​தர​வு​கள், ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்க இருப்​ப​தாக செய்தி வெளியாகியுள்ளது. இது​வும் சிபிஐ புலன் விசா​ரணை​யை பாதிக்கும்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்​கின் புலன்​ வி​சா​ரணையை சிபிஐ நிறைவு செய்​யும் வரை, தமிழக முதல்​வர் விஜய், வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள அமைச்சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, ஆனந்த், நிர்மல் குமார் உள்​ளிட்டோர் எதிர்க்கட்சிகளை மிரட்​டும் வகையிலும், வழக்கு குறித்தும் பேச தடை விதிக்க வேண்​டும். பாதிக்கப்​பட்ட நபர்​களுக்கு எவ்​வித நலத்​திட்​டங்​களை​யும் சிபிஐயிடம் தாக்​கல் செய்​து​விட்​டு, உச்ச நீதி​மன்றம் வகுக்​கும் விதிகளின்படி வழங்குமாறு உத்தர​விட வேண்​டும். சாட்சிகள், ஆதா​ரங்களை கலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு எதி​ராக வழக்​கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்​தர​விட வேண்​டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

திமுக தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “உங்கள் கோரிக்கைகள் அனைத்துமே அரசியல் நோக்கம் கொண்டவை. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றக்கூடிய தன்மை கொண்டவை.

முதல்வர் விஜய்யை குற்றம் சாட்டப்பட்டவர் என தெரிவித்தீர்கள். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த சிபிஐ பட்டியலில் முதல்வர் விஜய் பெயர் இல்லை. எனவே, உங்கள் வாதம் தவறானது.

கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பேச தடை விதிக்க வேண்டும் என்றால், அவர்களின் பேச்சு சுதந்திரத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக உதவிகளை வழங்குவது, வழக்கின் போக்கை மாற்றக் கூடும் என நீதிமன்றம் கருதவில்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், பதிலுக்கு நீங்கள் கருத்து தெரிவியுங்கள். ஆனால், அதை ஒரு வழக்காக தொடுத்து உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாதீர்கள். அரசியல் எதிரிகளின் கருத்துகளுக்கு எதிராக எப்படி உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்?

எனவே, இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்ய விரும்புகிறோம். நாங்கள் தள்ளுபடி செய்யட்டுமா அல்லது நீங்கள் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்கிறீர்களா?” என்று தெரிவித்தனர். இதையடுத்து, திமுக தனது மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதன்மூலம், முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கோ, அங்கு பேசுவதற்கோ, நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கோ எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் வழக்கு: முதல்வர் விஜய்க்கு எதிராக  இடையீட்டு மனு தாக்கல் செய்த திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
இந்தோனேசியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in