

புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர்களின் செயல்பாடுகளை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
போலி வழக்கறிஞர்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லா இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள்போல சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் ஒட்டுண்ணிகளாக இருந்து தாக்குதல் நடத்துகின்றனர் என கூறியிருந்தார். இக்கருத்தை அடுத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் லட்சக் கணக்கானோர் பின் தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போலி வழக்கறிஞர்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயல்பாடுகளையும் சிபிஐ விசாரிக்கவும், உச்ச நீதிமன்றத்தில் நேரலை விசாரணையை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதை தடுக்கவும் உத்தரவிடக் கோரி ராஜா சௌத்ரி உள்ளிட்டோர் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த ரிட் மனுக்களை விரைந்து விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் வழக்கறிஞர்கள் ராஜா சௌத்ரி, என்.கே. கோசுவாமி ஆகியோர் நேற்று ஆஜராகி கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம் அளித்த பிறகும் விஷமத்தனமாக, திரித்துக் கூறும் போக்கு தொடர்கிறது. இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும்" என்று முறையிட்டனர். அப்போது தலைமை நீதிபதி இதை சென்டிமென்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டு விரைந்து விசாரிக்கவும் மறுப்பு தெரிவித்தார்.
இதனிடையே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு முடக்கியது. இதற்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.