

புதுடெல்லி: அப்பாவி முதலீட்டாளர்களை மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள் ஒட்டுண்ணிகள் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
சைபர் குற்ற வழக்கில் பிஹாரின் பாட்னா, ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு, தமிழ்நாட்டின் திருப்பூர் ஆகிய பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக இணைக்கக் கோரி பிஹாரை சேர்ந்த மனோஜ் குமார் சிங் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி வி.மோகனா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அனில் நாக் முன் வைத்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், "உங்களைப் போன்ற சைபர் குற்றவாளிகள் ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு அப்பாவி முதலீட்டாளர்களை ஏமாற்றுகிறீர்கள். தமிழ்நாட்டில் ஒருவரை ஏமாற்றிவிட்டு ஜம்மு- காஷ்மீர் செல்வது. பிறகு அங்கும் ஏமாற்றிவிட்டு வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.
சைபர் குற்றங்களால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இது போன்ற சைபர் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சமூகத்துக்கு நலன் பயக்கும். தேவைப்பட்டால் அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடலாம்" என்று குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.