

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராகவும், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் சார்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் முறையிட்டார்.
ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்தால் தமிழக அரசின் மனு பட்டியலிட அனுமதிக்கப்படும் என உத்தரவிட்டார்.