

புதுடெல்லி: இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.
இண்டிகோ விமான சேவை 7-வது நாளாக நேற்றும் பாதிக்கப் பட்டது. நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது:
விமானிகள் பணிநேரம் குறித்த புதிய விதிகள் அமலுக்கு வந்தததால், இண்டிகோ நிறுவனம் பைலட் பற்றாக்குறை பிரச்சினையை சந்தித்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர்.
நாங்கள் விமானிகள், விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் மீது அக்கறை செலுத்துகிறோம். இதை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். விமானிகள் மற்றும் ஊழியர்களின் பணி நேர அட்டவணையை தயாரிக்க வேண்டியது இண்டிகோ நிறுவனத்தின் பொறுப்பு. அவர்கள் தங்கள் பணியை செய்யாததால் பயணிகள் தவித்தனர்.
இந்த விவகாரத்தை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து மற்ற விமான நிறுவனங்களுக்கு முன்மாதிரியை ஏற்படுத்துவோம். புதிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும். விமான போக்குவரத்து துறையில் அதிக நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. 5 பெரிய விமான நிறுவனங்களை வைத்துக் கொள்ளும் அளவுக்கு நாட்டின் திறன் உள்ளது. இவ்வாறு ராம்மோகன் நாயுடு கூறினார்.
அமைச்சர் பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
ரூ.827 கோடி ரீபண்ட்: இண்டிகோ நிறுவனம் இதுவரை விமானங்களை ரத்து செய்ததற்காக பயணிகளுக்கு ரூ.827 கோடியை வழங்கியுள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை 9,55,591 டிக்கெட்டுகளை ரத்து செய்து விமான கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்றுவதற்காக சேகரிக்கப்பட்ட 4,500 முதல் 9,000 பைகள் மற்றும் பெட்டிகளையும் திரும்ப வழங்கியுள்ளது.