

புதுடெல்லி: வேலையில்லாத இளைஞர்களை, கரப்பான் பூச்சி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் இந்திய இளைஞர் அப்ஜித் தீப்கே கடந்த 16-ம் தேதி ‘காக்ரோச் ஜனதா கட்சியை' (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) தொடங்கினார். இந்த கட்சியின் சமூக வலைதளங்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்தனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் கணக்கை 2.2 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்தனர். இந்த சூழலில் அப்ஜித் தீப்கே, எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
காக்ரோச் ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் ‘ஹேக்' செய்யப்பட்டு உள்ளது. எக்ஸ் தளத்தை தவிர்த்து இதர அனைத்து சமூக வலைதளங்களும் ‘ஹேக்' செய்யப்பட்டு உள்ளன. எங்களது இணையதளத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருந்தனர்.
நாங்கள் கரப்பான் பூச்சிகள். எங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுகிறது. எங்கள் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது சர்வாதிகார நடவடிக்கை ஆகும். இந்திய இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
எங்கள் கட்சியின் எந்தவொரு சமூக வலைதள கணக்கும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றில் வெளியாகும் எந்த பதிவுகளையும் நம்ப வேண்டாம். கரப்பான்பூச்சிகள் சாகாது. புதிய வடிவில் மீண்டு வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.