

புதுடெல்லி: அகில இந்திய வானொலியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: மே 25-ம் தேதி பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கவுள்ளார். இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்கள் குறித்த தொடர் ‘பீப்பிள்ஸ் பத்மா ஆன் ஆகாஷ்வாணி' என்ற பெயரில் மே 24-ம் தேதி (இன்று) முதல் ஒலிபரப்பாகவுள்ளது. விருது பெற்றவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் செய்த சாதனைகள் குறித்த பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெறும்.
மே 24, 25-ம் தேதிகளில் காலை 9.10 மணி முதல் 100.1 என்ற அலைவரிசையில் `ஆகாஷ்வாணி கோல்ட்' என்ற தலைப்பில் இந்த தொடர் ஒலிபரப்பாகும். இந்த தொடரை நியூஸ் ஆன் ஏர் என்ற செல்போன் செயலி, நியூஸ் ஆன் ஏர் என்ற யூடியூப் சேனலிலும் காணலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் அதிகம் பிரபலமாகாதவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த தொடர் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.