

லே: ஈரானில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில், அஞ்சுமன் இமாமியா லே மற்றும் மஜ்லிஸ்-ஏ-உலமா லே உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகள் நிதி திரட்டி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நடைபெற்ற ஒரு ஏல நிகழ்ச்சியில் ஒரு முட்டை மட்டும் ரூ.25,000-க்கு விற்பனையானது. அந்த முட்டையை ஏலத்தில் வாங்கிய ஷபீர் உசேன் கூறும்போது, “ஒரு முட்டையின் விலை ரூ.10 என்பது அனைவருக்கும் தெரியும். என்னிடம் பணம் உள்ளது என்பதால் நான் ரூ.25,000 கொடுக்கவில்லை. ஈரானில் குழந்தைகள் எவ்வளவு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்ற செய்தியை இது உலகுக்குச் சொல்கிறது.
அவர்களுக்காகவே நான் இந்தத் தொகையை வழங்கினேன். நாங்கள் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இந்த சமூகத்துக்காகவே நாங்கள் வாழ்கிறோம். எங்கள் தலைவர் என்ன சொல்கிறாரோ அதைப் பின்பற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதுவரை, எங்கள் தலைவர் எங்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை" என்றார்.
ஜம்மு காஷ்மீர் மக்களும் பணம் மட்டுமல்லாமல் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கால்நடைகள் மற்றும் பாரம்பரிய செப்புப் பாத்திரங்களையும் நன்கொடையாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.