

ராஜ்நந்கான்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்தர் என்ற சோமா. மாவோயிஸ்ட் குழுவில் மத்திய குழு உறுப்பினராக உள்ள இவர் மீது 61 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மகாராஷ்டிர மாநிலத்துக்கு பொறுப்பாளராக இருந்துள்ளார்.
மாவோயிஸ்ட்கள் மீது பாதுகாப்பு படையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாலும், சரணடையும் மாவோயிஸ்ட்களின் மறுவாழ்வுக்கு உதவுவதாலும் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மூத்த தலைவர் ராம்தர் ராஜ்நந்கான் மாவட்ட போலீஸாரிடம் சரணடைந்துள்ளார். பாதுகாப்பு படையினரிடம் இருந்து திருடப்பட்ட ஏ.கே.47 ரக துப்பாக்கியையும் அவர் ஒப்படைத்தார்.
இவருடன் சேர்ந்த மண்டல கமிட்டி உறுப்பினர் சாந்து உசேந்தி மற்றும் ஜான்கி உட்பட பலர் சரணடைந்தனர். இவர்களும் திருடப்பட்ட 3 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உட்பட பல துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். சத்திஸ்கர் மாவோயிஸ்ட் அமைப்பில் தற்போது 3 மத்தியக் குழு உறுப்பினர்கள் மற்றும் 2 பொலிட்பீரோ உறுப்பினர்கள் மட்டுமே மீதம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் வேறு மாநிலங்களில் உள்ளனர்.