

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானேவைச் சேர்ந்த 70 வயது முதியவரை வாட்ஸ்-அப் மூலம் ஆத்விகா சர்மா மற்றும் ராகேஷ் ஜெயின் ஆகியோர் தொடர்பு கொண்டுள்ளனர். பங்குகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி முதியவரிடம் ஆசையை தூண்டியுள்ளனர்.
இதற்காக அந்த முதியவருக்கு டிரேடிங் அக்கவுண்டை ஆரம்பித்து அதில் முதலீடு செய்ய அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் பங்கு வர்த்தகத்தில் செய்த முதலீடு மற்றும் அதற்காக கிடைத்த லாபம் ரூ.6.44 கோடியை முதியவருக்கு தெரியாமல் அவரது கணக்கில் இருந்து ராகேஷ் ஜெயின் மற்றும் ஆத்விகா சர்மா ஆகியோர் மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் பிஎன்எஸ் 318 (4) மோசடி, தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்த பணத்தை அவர்கள் எந்தெந்த வங்கி கணக்குகளின் மூலம் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.