

பெங்களூரு: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் 4-வது ஆண்டாக தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவாஜி நகர் அருகிலுள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினீயர்ஸ் வளாகத்தில் டிசம்பர் 14-ம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது.
நேற்று மாலை 6 மணிக்கு ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்' நூலை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, நூலின் தொகுப்பாசிரியர் க.செல்வி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஏற்புரையில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லி பாபு பேசியதாவது: அறிவியல் என்பது மாணவர்களுக்கு மட்டுமானது அல்ல. அனைத்து மக்களின் நலனுக்குமானது. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து மக்களுக்கு தேவையான கண்டுபிடிப்புகள் மலர்வதற்கு அறிவியலே காரணம். கடந்த 1950-களில் இந்தியாவில் பால் தட்டுப்பாடு நிலவியது.
அதனால் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பால் பவுடர் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவில் எருமை மாடுகள் இருந்தாலும் அதில் இருந்து பால் பவுடர் தயாரிக்க முடியாது என கூறப்பட்டது. வர்கிஸ் குரியன் போன்ற விஞ்ஞானிகள் வெண்மை புரட்சியின் மூலம் அதனை பொய்யாக்கி பால் பவுடர் தயாரித்தனர். உள்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்கி, இன்று உலகிலேயே பால் பொருள் ஏற்றுமதியில் இந்தியாவை முதல் நாடாக மாற்றியுள்ளார்.
இவ்வாறு மக்களின் துயரை அறிவியலே போக்கியது. எனவே அறிவியலை அன்றாட வாழ்வில் அனைவரும் பேசி, அதை மக்களின் நலனுக்கானதாக மாற்ற வேண்டும். இவ்வாறு டில்லிபாபு தெரிவித்தார்.
இந்து தமிழ் திசை நூல்கள்: பெங்களூரு புத்தக திருவிழாவில் பண்டிதர் பதிப்பக அரங்கில் இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.