

புதுடெல்லி: மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் சஞ்சார் சாத்தி என்ற செயலி செயல்படுகிறது. திருடுபோன செல்போனை கண்டுபிடிக்கவும் இணையவழியில் நடைபெறும் மோசடியை தடுக்கவும் இது உதவுகிறது.
இந்நிலையில், புதிய செல்போன்களில் இந்த செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்றும் 90 நாட்களுக்குள் இதை அமல்படுத்த வேண்டும் என்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறும்போது, ‘‘சஞ்சார் சாத்தி ஒட்டு கேட்பு செயலி. இதை கட்டாயமாக்குவது அபத்தமான செயல். இது பொதுமக்களின் தனி உரிமையை மீறும் செயல்’’ என்றார்.
இதுபோல காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று கூறியதாவது: கடந்த 2024-ல் நம் நாட்டில் இணையவழியில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. இதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அதேநேரம், இணையவழி மோசடியைத் தடுக்க சஞ்சார் சாத்தி செயலியை வழங்கினால், அது ஒட்டு கேட்பு செயலி என குறை கூறுகின்றன.
வாடிக்கையாளர் நலன் கருதியே புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவ வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்த வேண்டியது கட்டாயம் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு வேண்டும் என்றால் அதில் பதிவு செய்து பயன்படுத்தலாம். விரும்பவில்லை என்றால் அந்த செயலி செயலற்ற நிலையில் இருக்கும். அந்த செயலியை நீக்க விரும்பினாலும் நீக்கிவிடலாம். ஆனால் இணையவழி மோசடியிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு செயலி உள்ளது என்பதை எல்லோரும் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே தகவலை பரப்ப வேண்டியது எங்கள் பொறுப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.