

ரஷ்ய அதிபர் புதின்
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து புறப்பட்டார் ரஷ்ய அதிபர் புதின்.
18-வது பிரிக்ஸ் மாநாடு நேற்று (சனிக்கிழமை) புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் மசூத் பெசஸ்கியான் மற்றும் பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிக்ஸின் கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் இரண்டு அமர்வுகளில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார். மேலும், பாரத் இன்னோவேட்ஸ் கண்காட்சியை அவர் கண்டுகளித்தார். இதில் தலைவர்கள் பங்கேற்ற அமர்வில் அவர் உரையாற்றினார்.
“ரஷ்யா மீது 30,000-க்கும் மேற்பட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது உலகின் அனைத்து நாடுகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடைகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்” என்று புதின் தெரிவித்தார்.
கடந்த நான்கரை ஆண்டு காலமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் நிலவுகிறது. இதில் இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜி ஜின்பிங்கின் முயற்சியை வரவேற்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த போரை நிறுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.