

நியூயார்க்: ‘மனித இனத்தை ஏஐ துடைத்தெறியுமா?’ என்ற கேள்விக்கு ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
அமெரிக்க நாட்டின் முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதை தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சி மனிதர்களை கொல்லும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜேக்கப் காக்ஸன் தெரிவித்திருந்தார். அது குறித்து டாரியோ அமோடியிடம் கேட்கப்பட்டது.
“ஜேக்கப்பின் கருத்தை நான் ஏற்கிறேன். அதை தவிர்க்க விரும்பவில்லை. அதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால், அது 10 சதவீதம் வரை இருக்கலாம் என்பது எனது கருத்து. அது ஏஐ வளர்ச்சியை சார்ந்து அடங்கியதாக இருக்கும். இந்த துறை சரியான திசையில் பயணித்தால், தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
ஆனால், அதுவே தவறான திசையில் சென்றால், அதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்” என்று டாரியோ அமோடி தெரிவித்தார்.
சுமார் 3,800 வார்த்தைகள் கொண்ட கட்டுரையில் செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சி முன்னணியில் இருப்பதாக டாரியோ அமோடி தெரிவித்தார். மேலும், ஏஐ திறன்கள் அதிதீவிரமாக மேம்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அது எந்த அளவுக்கு என்றால் சிறந்த ஏஐ சிஸ்டம்களை ஏஐ-யே உருவாக்கிக் கொள்ளும் திறன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில் அது மனிதர்களின் திறனை விஞ்சும் என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், சிஸ்டம்களை புரிந்து கொள்ளும் திறனை மனிதர்களை காட்டிலும் ஏஐ அதிகம் கொண்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அதனால் ஏஐ துறை சார்ந்த வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் ஏஐ நுட்பம் மற்றும் அதன் வளர்ச்சி இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.