

கைது செய்யப்பட்ட மோகன் நாயக் ஜருப்லா
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் சாலை மற்றும் கட்டிடத் துறை அதிகாரி மோகன் நாயக் ஜருப்லா. இவர் லஞ்சம் வாங்குவதாக பல புகார்கள் வந்தன.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மோகன் நாயக்கின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவர் சட்டத்திற்கு புறம்பாக ரூ.82.09 லட்சம் மதிப்புள்ள 19.38 ஏக்கர் விவசாய நிலம், ரூ.7.35 கோடி மதிப்புள்ள 7 வீடுகள், வங்கி டெபாசிட் ரூ.1.44 கோடி, ரூ.55 லட்சம் ரொக்கம், ரூ.2 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்க நகைகள், ரூ.3.6 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1.26 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள், ரூ.11.25 லட்சம் மதிப்புள்ள 9 விலை உயர்ந்த மொபைல் போன்கள், 4 லேப் டாப்கள், ரூ.25 லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே இருக்கும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.