

கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் லவ்கேஷ்
புதுடெல்லி: டெல்லி ஓட்டல் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம், பலத்த தீக்காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
டெல்லி மாளவியா நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வருகை தருகின்றனர். அவர்களோடு வரும் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் தங்குகின்றனர். இந்த சூழலில் மாளவியா நகரில் உள்ள ‘ஃபிளரிஷ் ஸ்டே’ ஓட்டலில் நேற்று முன்தினம் காலை தரை கீழ்தளத்தில் உள்ள சமையல் அறையில் தீ ஏற்பட்டது. இதில் தரை கீழ் தளம், தரைத்தளம் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது. அருகில் உள்ள "மிகாசா இன்" ஓட்டலுக்கும் தீ பரவியது.
இந்த தீ விபத்தில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில் 12 பேர் ஆப்பிரிக்க நாடுகள், வங்கதேசம், துர்க்மெனிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். 40-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் ஆவர். இதில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம், பலத்த தீக்காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
தீ விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக ஓட்டல்களுக்கு உரிமம் வழங்கிய அதிகாரிகள், தீயணைப்புத் துறை சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். தலைமறைவாக இருந்த ‘ஃபிளரிஷ் ஸ்டே’ ஓட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
45 பேரை காப்பாற்றிய மக்கள்: ‘ஃபிளரிஷ் ஸ்டே’, ‘மிகாசா இன்’ ஓட்டல்கள் தலா 5 மாடிகளை கொண்டவை. இவற்றில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்த ஓட்டல்களில் தீ விபத்து ஏற்பட்டதும் உள்ளூர் மக்கள் ஓடோடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாடிகளில் தங்கியிருந்தவர்கள் ஜன்னல்கள் வழியாக கூக்குரலிட்டனர்.
ஓட்டல்களின் முன்பு தரை விரிப்பு, போர்வைகளை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. அந்த கடைகளின் உரிமையாளர்கள் பெரிய தரை விரிப்பு, போர்வைகளை கொண்டு வந்தனர். அவற்றை உள்ளூர் மக்கள் வட்ட வடிவில் கெட்டியாகப் பிடித்து நின்றனர். தீ பரவுவதற்கு முன்பாக ஓட்டல்களின் மாடிகளில் தங்கியிருந்தவர்கள் ஜன்னல்கள் வழியாக போர்வை, தரை விரிப்புகள் மீது ஒவ்வொருவராக குதித்தனர். இதன் மூலம் சுமார் 45-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணிகளில் ஈடுபட்ட வாசீம் ராஜா உள்ளூர் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். அவர் தீக்காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார். முகமது அப்சல், அர்மான் கான், ரியாசுதீன் மன்சூரி உள்ளிட்டோர் முன்வரிசையில் நின்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி போலீஸார் பாராட்டி கவுரவித்தனர்.