

| படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: பள்ளிக்கரணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மாநகராட்சி சார்பில் சாலையோரம் அகற்றப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்த பழைய வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
பள்ளிக்கரணை சுற்றுச்சூழல் பூங்கா எதிரே உள்ள மயிலை பாலாஜி நகரை ஒட்டிய பகுதியில் பழைய குப்பை கிடங்கு உள்ளது.
இங்கு சாலையோரங்களில் கைவிடப்பட்ட நிலையில், போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக இருந்த வாகனங்கள் மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை சார்பில் அகற்றப்பட்டு, பள்ளிக்கரணை பழைய குப்பை கிடங்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதே பகுதியில், மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை மூட்டையாக சுற்றி வைக்கும் கூடமும் செயல்பட்டு வருகிறது.
அந்த பிளாஸ்டிக் மூட்டைகள், சிமென்ட் தொழிற்சாலையில் எரிபொருளாக பயன்படுத்த அனுப்பப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் நேற்று காலை தீப்பிடித்தது.
இந்த தீ, அருகில் நிறுத்தப்பட்டிருந்த பழைய வாகனங்கள் மீதும் பரவி, கரும்புகை வெளியேறி, அப்பகுதியை சுற்றி காற்றில் பரவியது இதனால், அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.
பின்னர், தகவல் அறிந்து மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்பு துறை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்து வந்து தீயை போராடி தீயை அணைத்தனர். தீயை அணைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவுகள் வகை பிரிக்கும் இடத்தில், சுமார் 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இப்பகுதியிலிருந்து தீ பிடித்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்.
தீயை அணைக்கும் பணியில் 9 தீயணைப்பு நீர் தெளிப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், தீயை அணைக்க சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 30 தண்ணீர் டேங்கர் லோடுகள் கொண்டு வரப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ பி.சரவணமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில், சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.