

புதுடெல்லி: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வுக் காலத்துக்காக வருங்கால வைப்பு நிதி (பிஎப்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும்.
கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 31.83 லட்சம் பிஎப் கணக்குகளில் ரூ.10,181 கோடி உரிமை கோரப்படாமல் இருந்தது. மத்திய அரசு தற்போது ‘‘உங்கள் பணம், உங்கள் உரிமை’’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்படி உரிமை கோரப்படாத பிஎப். தொகை, வங்கி கணக்கு டெபாசிட், காப்பீட்டு தொகை, ஈவுத் தொகை, பிற நிதி சொத்துகள் உரியவர்களிடம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த ஓராண்டில் பல்வேறு பிஎப் கணக்குகளில் முடங்கி இருந்த ரூ.851 கோடி உரியவர்களிடம் அளிக்கப்பட்டது. தற்போதைய புள்ளி விவரங்களின்படி நாடு முழுவதும் சுமார் 31 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎப் கணக்குகளில் ரூ.9,330 கோடி முடங்கியுள்ளது.
இந்த தொகையை உரியவர்களிடம் திருப்பி அளிக்க அதிதீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிஎப் கணக்குகளில் முடங்கியிருக்கும் ரூ.9,330 கோடி நிதி மூலம் 3 ஐஐடி கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.