

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க வாக்கெடுப்பு நடந்த கீழூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி, ராஜ்பவன் தொகுதியில் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் தந்தை பெரியார் பள்ளி ஆகிய 3 வாக்குச்சாவடிகள் தனித்துவமாக அமைக்கப்பட்டிருந்தன. அங்கு வாழை மரம், தோரணம் கட்டப்பட்டு, பூச்சரங்கள் தொங்கவிடப்பட்டு, தென்னை ஓலைப் பந்தல் சூழப்பட்டு ‘பசுமை வாக்குச்சாவடி’களாக அழகுடன் காணப்பட்டன.
வஉசி பள்ளி வாக்குச்சாவடியில் பெண் போல அலங்கரிக்கப்பட்ட ரோபோ ஒன்று, வாக்காளர்களுக்கு பூக்கள் வழங்கி வரவேற்றது வித்தியாசமாக இருந்தது. கல்லூரி மாணவர்கள் வடிவமைத்திருந்த அந்த ரோபோவில் இருந்து, ‘வாக்களிக்க வந்த உங்களை வரவேற்கிறேன். வாக்களிப்பது உங்கள் ஜனநாயகக் கடமை. அந்த கடமையை ஆற்றுங்கள்’ என்ற வாசகம் ஒலிக்க அதை ஆர்வத்துடன் பார்த்தபடியே வாக்காளர்கள் வாக்களிக்கச் சென்றனர். வாக்களித்து செல்லும் போது மரக்கன்றுகளையும் தந்து மகிழ்வித்தனர்.