

புதுடெல்லி: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை சேர்ந்த 26 நிர்வாகிகள் மீது, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டில் கேரளாவில் பிஎப்ஐ அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு 22 மாநிலங்களில் கிளைகள் இருந்தன. டெல்லி ஷாகின் பாக் போராட்டம், பெங்களூரு கலவரம், பிரயாக்ராஜ், சகாரன்பூர் கலவரம் ஆகியவற்றில் பிஎப்ஐ மீது குற்றம் சாட்டப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் மதரீதியான கொலைகளிலும் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தச் சூழலில் கடந்த 2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்பின் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஏஐ) சோதனை நடத்தியது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது.
பிஎப்ஐ தலைவர் சலாம், துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் அனீஸ் அகமது உட்பட 26 பேர் மீதான வழக்கு டெல்லியில் உள்ள என்ஏஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), பிஎப்ஐ சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரசாந்த் சர்மா நேற்று முன்தினம் ‘‘மதச்சார்பற்ற இந்திய அரசை கவிழ்த்து வரும் 2047-ம் ஆண்டுக்குள் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த ஆயுத போராட்டம் நடத்த பிஎப்ஐ சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையோர் சதித் திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பிஎப்ஐ அமைப்பின் தலைவர் உட்பட அந்த அமைப்பின் 26 நிர்வாகிகள் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 10-ம் தேதி நடைபெறும்’’ என்று உத்தரவிட்டார்.