

புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது.
ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சந்திர சேகர் கவுர் என்பவர் கேட்டுள்ளார்.
இதற்கு ரயில்வே அளித்த பதிலில் கடந்த 2025-26-ம் நிதியாண்டில் 3.39 கோடி பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருந்து இடம் கிடைக்காததால் அவர்களின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டில் டிக்கெட் உறுதி செய்யப்படாமல் ரத்து செய்யப்படும் பயணிகளின் எண்ணிக்கை 1.65 கோடியாக இருந்தது.
2022-23-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2.72 கோடியாக உயர்ந்தது. 2023-24-ம் ஆண்டில் இது 2.96 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் இது 3.39 கோடியை எட்டியுள்ளது. டிக்கெட் ரத்தாவதன்மூலம் பண இழப்பு உள்ளிட்ட அதிக பாதிப்புகளை சந்திப்பது படுக்கை வசதி மற்றும் 3-ம் வகுப்பு ஏசி வகுப்பில் முன்பதிவு செய்யும் பயணிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 92,877 பயணிகள், ஒவ்வொரு மணி நேரமும் 3,870 பயணிகள், ஒவ்வொரு நிமிடமும் 64 பயணிகள், ஒவ்வொரு விநாடியும் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படும் வாய்ப்பை இழக்கின்றனர்.