

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான 10 நாள் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆக.16-ம் தேதி தொடங்கி, ஆக.26-ம் தேதி வரை திருவோணம் திருநாளுடன் நிறைவடைகிறது. இந்த விழா காலம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சுற்றுலா நிகழ்வுகளால் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும். எனவே, பயணிகள் வசதிக்காக, 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது: கேரளா முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி, 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் சேவைகளை ரயில்வே அமைச்சகம் விரைவில் அறிவிக்கும்.
கேரள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ரயில்வே அமைச்சகம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையே இந்த நடவடிக்கை பிரதி பலிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.