

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள், பெண்களின் பெயரால் நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் முயற்சி என்று நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது: இந்தச் சபையில் இன்று சில உண்மைகள் உரக்கச் சொல்லப்பட வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா பெண்களுக்கானது அல்ல. இது பெண்களை முன்னிறுத்தி, நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றி அமைக்கும் ஒரு தந்திரமே தவிர வேறொன்றுமில்லை.
கடந்த 2023-ம் ஆண்டு இதே சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கும், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. 2023 மசோதாவை இன்னும் 10 ஆண்டுகளில் அமல்படுத்துவோம் என்று பாஜகவினர் கூறினர். ஆனால், தற்போதைய மசோதா முற்றிலும் மாறுபட்டது.
உண்மையிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், பழைய மசோதாவை உடனடியாகக் கொண்டு வாருங்கள். அதனை இப்போதே அமல்படுத்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளிப்போம். அதை விடுத்து, பெண்களின் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வது வெட்கக்கேடானது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாகும். எனது ஓபிசி சகோதர, சகோதரிகளுக்கு அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களிடமிருந்து அதைப் பறிக்கும் முயற்சியே இது. இவ்வாறு ராகுல் பேசினார்.
முன்னதாக, தனது உரையை நகைச்சுவையுடன் தொடங்கிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடிக்கும் எனக்கும் மனைவி சார்ந்த சிக்கல்கள் இல்லை. எனவே அந்தத் தரப்பிலிருந்து எங்களுக்குத் தகவல்கள் வருவதில்லை (இவ்வாறு அவர் குறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை உண்டானது). கடந்த 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் என்னால் செய்ய முடியாத ஒன்றை எனது சகோதரி பிரியங்கா காந்தி செய்துள்ளார்; அமித் ஷாவை சிரிக்க வைத்ததுதான் அது.” என்று ராகுல் குறிப்பிட்டார்.