

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 140-வது நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான இந்திரா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் வெறும் கட்சி அல்ல. அது இந்திய ஆன்மாவின் குரல். நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மற்றும் உழைப்பாளி ஒவ்வொருவருடனும் உறுதி குலையாமல் துணை நிற்கிறோம்.
வெறுப்பு, அநீதி மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிராக உண்மையையும், துணிவையும் மற்றும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுப்பதே எங்களின் உறுதி.
இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்து, அரசியலமைப்புக்கு அடித்தளமிட்டு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகிய விழுமியங்களை வலுப்படுத்திய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரபுக்கும், மாபெரும் தியாகங்களுக்கும் நாங்கள் எங்களது அஞ்சலியைச் செலுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி தலைவர் கார்கே பேசும்போது, “எங்கள் பலம் குறைந்திருக்கலாம், ஆனால் எங்களது முதுகெலும்பு இப்போதும் நிமிர்ந்தே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, ஏழைகளின் உரிமைகள் என எதிலும் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. காங்கிரஸ் என்பது ஒரு சித்தாந்தம். சித்தாந்தங்கள் ஒருபோதும் அழிவதில்லை’’ என்றார்.