

பிரதமர் இல்லம் அருகே நேற்று போராட்டம் நடத்திய ராகுல், பிரியங்கா, அகிலேஷ் ஆகியோரை காவல் துறை பேருந்தில் ஏற்றிய போலீஸார். படங்கள்: பிடிஐ
புதுடெல்லி: பிரதமர் மோடியின் அரசு இல்லத்தின் முன்பு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் நாடளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி சென்றனர். அவர்களைப் போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து பிரதமர் இல்லம் அமைந்துள்ள எண்.7, லோக் கல்யாண் மார்க் நோக்கி பேரணி சென்றனர்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், பவன் கேரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கேரள முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் கட்சி எம்.பி.க்கள் பேரணியில் பங்கேற்றனர். பின்னர் பிரதமர் இல்லத்துக்கு வெளியே அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து ‘எக்ஸ்' தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிரதமர் மோடியிடம் இருந்து விளக்கம் கேட்கவே நாங்கள் அவரது இல்லம் நோக்கி பேரணியாகச் சென்றோம். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காகப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தியை மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், பியூஷ் கோயல் ஆகியோர் சந்தித்து போராட்டத்தை முடித்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அதேவேளையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரைப் போலீஸார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிசென்றனர். அப்போது ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. தகவல் அறிந்து மந்திர் மார்க் போலீஸ் நிலையத்துக்கு சோனியா காந்தி விரைந்து சென்றார்.
பின்னர் ராகுல் உட்பட போராட்டம் நடத்தியவர்கள் இரவு 10 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். முன்னதாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் பேசியதாவது: கல்வி மற்றும் தேர்வு முறைக்கு எதிராக இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அநியாயத்தை நிறுத்த வேண்டும். இங்கு நடப்பது இந்தியத் தன்மைக்கு முரணானது.இவ்வாறு ராகுல் கூறினார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது நீட் தேர்வு முறைகேடு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதன் காரணமாக முதல் நாளில் நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது.
இரண்டாவது நாளான நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது நீட் தேர்வு முறைகேடு, சிஜேபி பேரணியில் நடத்தப்பட்ட தடியடி குறித்து எதிர்க்கட்சிகள்கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறும்போது, ‘‘அவையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கலாம். இதற்காக எம்.பி.க்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளித்தார். எனினும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.
இதனால் பிற்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது, அமளி தொடர்ந்தது. இதனால் பிற்பகல் 2 மணி வரைஅவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடிய போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவ, மாணவிகள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு கேட்டறிய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
கார்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கோஷமிட்டனர். தொடர் அமளியால் மதியம் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடிய போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின்இரு அவைகளும் 2-வது நாளாக நேற்றும் முடங்கின.