

ராகவ் சத்தா
புதுடெல்லி: சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா, மாநிலங்களவை மனுக்கள் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை
மனுக்கள் குழுவை மாற்றியமைத்துள்ளார். இதன்படி, இக்குழுவின் தலைவராக ராகவ் சத்தா நியமிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ராகவ் சத்தா உள்ளிட்டோர், சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்குழுவுக்கு, ஹர்ஷ் மகாஜன், குலாம் அலி, ஷம்பு சரண் படேல், மயங்குமார் நாயக், மஸ்தான் ராவ் யாதவ் பீதா, ஜெபி மாதர் ஹிஷாம், சுபாசிஷ் குந்தியா, ருங்வ்ரா நர்சாரி மற்றும் சந்தோஷ் குமார் பி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் நியமனம் மே 20 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களவை செயலகம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், ‘‘2026 மே 20 அன்று, நிறுவன சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-க்கான கூட்டுக்குழுவின் உறுப்பினராக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மேனகா குருசாமியை மாநிலங்களவை தலைவர் பரிந்துரை செய்துள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.