

கேதன் விஷால் அகர்வால், சியா கோயல்
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இயக்குநர் கேதன் விஷால் அகர்வால்(25). இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால் இவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. தனது காதலன் சேத்தன் சவுத்ரி (22) என்பவரை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக கேதன் விஷாலுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனால் கேதன் விஷாலை கொலை செய்ய முடிவு செய்தார். தங்கள் பகுதியில் உள்ள லோகாகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்று மலை உச்சியில் இருந்து கேதனை தள்ளி கொலை செய்ய முடிவு செய்தார்.
இவர்கள் லோகாகாட் கோட்டைக்கு கடந்த மே 31, ஜுன் 14 மற்றும் 18ம் தேதிகளில் மலையேற்றத்துக்கு சென்றுள்ளனர். ஜுன் 14ம் தேதியே கேதனை பள்ளத்தில் தள்ளிவிட முயன்றுள்ளார். ஆனால் அருகில் உள்ள புதரைப் பிடித்து கேதன் தப்பித்தார். அப்போது பாம்பு ஒன்று வந்ததாக கூறி சியா, கேதனை ஏமாற்றியுள்ளார்.
மூன்றாவது முறையாக கடந்த 18ம் தேதி தனது காதலனை பின் தொடர்ந்து வரச் செய்து இருவரும் சேர்ந்து கேதனை பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளனர். மலை உச்சியில் போட்டோ எடுக்க முயன்றபோது, கேதன் தவறி விழுந்ததாக சியா கூறியதால், இது தற்செயல் விபத்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கேதன் இறந்த 4 நாள் கழித்து அவரது வீட்டுக்கு இரங்கல் தெரிவிக்க சியா சென்றார்.
அப்போது கேதன் எப்படி பள்ளத்தில் விழுந்தார் என அவரது சகோதரி சியாவிடம் பல கேள்விகள் எழுப்பினார். இதில் சியா அளித்த பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அவர் மீது கேதன் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அவர் தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்க, அவர்கள் போலீஸாரிடம் கேதன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்துதான் போலீஸார் வேறு கோணத்தில் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
சியாவுக்கு சேத்தன் என்பவருடன் தொடர்பு இருந்தது தெரியவர அவர்களது போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் இந்த ஆண்டில் மட்டும் இருவரும் 2,004 முறை மொத்தம் 238 மணி நேரம் பேசியுள்ளனர். விபத்து நடந்த பகுதியில் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, தலையை மறைக்கும் ஹுடி சட்டை அணிந்த நபர், கேத்தன் மற்றும் சியா ஆகியோர் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்தது தெரியவந்தது. ஜுன் மாதம் கொளுத்தும் வெயிலில் இவர் தலையை மறைக்கும் உடையுடன் சென்றது போலீஸாரின் சந்தேகத்தை வலுவடையச் செய்தது.
மேல் விசாரணையில் அவர் ஷியாவின் காதலன் சேத்தன் என்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக நடைபெற்ற விசாரணையில் தான் கேதனை இருவரும் 350 அடி ஆழ பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். கேதனின் சகோதரிக்கு மட்டும் சியா மீது சந்தேகம் எழவில்லை என்றால், இந்த திட்டமிட்ட கொலை சம்பவம், தற்செயல் விபத்தாகவே முடிந்திருக்கும்.