

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று முடிந்த பிறகு சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். கடந்த முறை போலவே இந்த முறையும் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதில் பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்கு 2 நாட்களுக்கு முன்பே ராகுல் ஜெர்மனி சென்று விட்டார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
விருந்துக்கு முன்னதாகவே வந்த பிரியங்கா, பிரதமர் மோடியுடன் சிரித்துப் பேசினார். காங்கிரஸ் எம்.பி.க்கள் குமாரி சைலஜா சிங், மாணிக்கம் தாகூர் மற்றும் முகமது ஜாவேத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலங்களவையில், கார்கே, சோனியா, திக்விஜய் சிங் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
சோனியா உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் சிரித்து பேசி தேநீர் அருந்தினர். இந்தளவுக்கு ஆளும் கூட்டணி கட்சி - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணக்கமாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் வட்டாரம் கூறும்போது, ‘‘மத்திய அரசின் மசோதாக்களுக்கு மக்களவையில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். முந்தைய கூட்டத்தொடருடன் ஒப்பிடும் போது இந்த முறை அவையின் நிலைமை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. எதிர்க்கட்சிகளுக்கும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் விளைவாக, 2014-க்கு பிறகு கடந்த கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது காணப்பட்ட எதிர்க்கட்சிகளின் அதிருப்தி இந்த முறை காணவில்லை. இதனால், தேநீர் விருந்தில் பங்கேற்க கட்சித் தலைவர் கார்கே முடிவு செய்தார்’’ என்றனர்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இடையே, 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடியும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.