அதிபர் விளாடிமிர் புதின் நாளை டெல்லி வருகிறார்: ரஷ்யா - இந்தியா இணைந்து எஸ் 500 ஏவுகணை தயாரிக்க திட்டம்
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக நாளை டெல்லி வருகிறார். அவரது பயணத்தின் போது ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்திய - ரஷ்ய 23-வது வருடாந்திர உச்சி மாநாடு டிசம்பர் 4, 5-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை டெல்லிக்கு வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, அணுசக்தி, தொழில்நுட்பம் குறித்து தலைவர்கள் இருவரும் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணைகளை வாங்க கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரை 3 எஸ் 400 ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியிருக்கிறது. மீதமுள்ள 2 தொகுப்புகள் அடுத்த ஆண்டில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது எஸ்-400 ஏவுகணைகள் மிக முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக இந்திய எல்லையில் இருந்து 300 கி.மீ. தொலைவில் பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்த அந்த நாட்டின் அதிநவீன உளவு விமானம் எஸ் 400 ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக எஸ் 400 ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் டெல்லியில் நேற்று கூறும்போது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது எஸ் 400 ஏவுகணை முக்கிய இடம்பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய கூடாது என்று அமெரிக்கா நிர்பந்தம் செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்தியா அடிபணியாது. ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்படும். ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை மூலம் சுமார் 400 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். அதிபர் புதினின் வருகையின் போது இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
அடுத்தகட்டமாக ரஷ்யாவின் எஸ் 500 ஏவுகணைகளை இந்திய விமானப் படையில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து எஸ் 500 ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து அதிபர் புதினுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஏவுகணை மூலம் 600 கி.மீ. தொலைவு வரையிலான தரை, வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்யு-57 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த போர் விமானங்களுக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்திருக்கிறது. இதன்படி எஸ்யு - 57 போர் விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.
மேலும் ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் விசா இல்லாமல் அந்த நாட்டுக்கு செல்வது குறித்தும் அதிபர் புதினும் பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
