

புதுடெல்லி: பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கி சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கினார். ஆனால், ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தேர்தல் தோல்விக்குப்பின் மேற்கு சம்பரானில் உள்ள காந்தி ஆசிரமத்தில் நேற்று முன்தினம் அமைதி உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பிஹாரில் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ் அமைச்சரவையில் உள்ளவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகள். இது பிஹார் மக்கள் முகத்தில் விழுந்த அறை. ஊழல் தலைவர்கள் பலரை அமைச்சரவையில் சேர்த்தது காயத்தில் உப்பை தடவுவது போன்றது.
ஜனவரி 15-ம் தேதி முதல் ‘பிஹார் நவநிர்மான் சங்கல்ப் யாத்திரை தொடங்கப்படும். 18 மாதங்கள் இந்த யாத்திரை நடைபெறும். அப்போது ஜன் சுராஜ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து இந்த அரசு செய்த தவறுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு முன்னர் கட்சியை வலுப்படுத்த நான் கடந்த 20 ஆண்டுகளில் சேர்த்த சொத்து முழுவதையும் கட்சிக்கு நன்கொடையாக வழங்குவேன். அதேபோல், பிஹார் மக்களும், ஜன் சுராஜ் கட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1000 நன்கொடை அளிக்க வேண்டும். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.