

புதுடெல்லி: ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்தல், தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ்-ன் சுதேசி ஜாகரன் மஞ்ச் அமைப்பின் தேசிய இணை அமைப்பாளர் அஸ்வினி மகாஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமரின் சிக்கன நடவடிக்கை அறிவிப்புகள் என்பது சுதேசி (உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்) கொள்கையின் மற்றுமொரு வடிவமாகும்.
பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வைக் குறைப்பதன் மூலம் அந்நியச் செலாவணி சேமிக்கப்படுவதுடன், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகளால் உண்டாகும் தட்டுப்பாட்டையும் நாடு திறம்பட எதிர்கொள்ள முடியும். பிரதமரின் இந்த வேண்டுகோள் நாட்டு மக்களின் மனநிலையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாகப் புதிய எரிசக்தி மூலங்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறையினருக்கு உத்வேகம் அளிக்கும். இவ்வாறு மகாஜன் கூறியுள்ளார்.