

மனோகர்லால்: இந்தியாவில் நகரமயமாக்கல் என்பது வெகுவிரைவாக வளர்ச்சியடைகிறது. 2050-ம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற தொழிலாளர்களில் சுமார் 66 சதவீதம் பேர் முறைசாரா துறைகளில் உள்ளனர்.
இத்துறைகளில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் சாலையோர வியாபாரிகள் ஆவர். பழங்கள், காய்கறிகள், தேநீர், சிற்றுண்டிகள், ஆடைகள் என நாள்தோறும் பயன்படுத்தப்படும் பொருட்களை விற்பனை செய்யும் லட்சக்கணக்கான வியாபாரிகள் பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன் நகர்ப்புற பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.
இவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தபோதிலும், சாலையோர வியாபாரிகளுக்கு முறையாக வங்கி கடன் வசதிகள் கிடைப்பது குறைவாக இருந்தது. இதனால் அவர்கள் அதிக வட்டி விகிதங்களைக்கொண்ட முறைசாரா நிதி ஆதாரங்களையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக அவர்கள் தங்களின் வருவாயின் பெரும் பகுதியை கடன் தவணைகள் செலுத்துவதிலேயே செலவிட வேண்டியிருந்தது. 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று அவர்களுடைய வணிகங்களை மிகவும் பாதிப்பு அடையச் செய்தது.
இதையடுத்து பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இது சாலையோர வியாபாரிகளுக்காக தொடங்கப்பட்ட முதலாவது விரிவான குறுங் கடன் திட்டமாகும். இது அவர்களுக்கு முறை சார்ந்த வழிகளில் நிதி வசதியை ஏற்படுத்தி தந்தது.
இந்த திட்டத்தின் கீழ், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ரூ.15,000, ரூ.25,000, ரூ.50,000 என 3 தவணைகளாக பிணையில்லா கடன்களை வழங்குகின்றன. கடன்களை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தவணைகளை தவறாமல் செலுத்தும் பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் திட்டத்தின் மூலம் சுமார் 76 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயன் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ. 17,800 கோடிக்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் திட்டம், வெறும் கடன்களை வழங்குவது மட்டுமின்றி, அவர்களுக்கு கண்ணியம், அங்கீகாரம், புதிய வாய்ப்புகளை பெற்றுத் தரும் வலிமைமிக்க கருவியாக உருவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மற்றொரு அம்சமாக யுபிஐ, கியூஆர் குறியீடு அடிப்படையிலான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கு பணத்தை திரும்ப பெறக்கூடிய ஊக்கத்தொகை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் மூலம் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மின்னணு பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களுடைய பரிவர்த்தனைகளை வெளிப்படையானதாகவும், நிதி நம்பகத்தன்மையை வலுவானதாகவும் மாற்றியுள்ளது. பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் திட்டம் மூலம் பயனாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் 8 முக்கிய நலவாழ்வு திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளின் குடும்பத்தினர் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டங்களால் 1.52 கோடிக்கும் அதிகமான பலன்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம், காப்பீடு, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு பலன்கள் பெறுவதை எளிதாக்குவதன் மூலம் இத்திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு விரிவான சமூகப் பாதுகாப்பு அமைப்பாக உள்ளது.
- கட்டுரையாளர்: மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர்