

புதுடெல்லி: ஆகஸ்ட் 31-ம் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்கிறார். அங்கு அந்த நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். நாளையும் நாளை மறுதினமும் பிரதமர் நரேந்திர மோடி தாஷ்கண்டில் தங்கியிருக்கிறார்.
வரும் 31-ம் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்குக்கு அவர் செல்கிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். எஸ்சிஓ அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர். கடந்த 2025-ம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போது கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக எஸ்சிஓ உச்சி மாநாடு அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.