

காங்டாக்: சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இரு நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை சிக்கிம் தலைநகர் காங்டாக் சென்றார். அங்கு நேற்று காலை நடந்த சிக்கிமின் 50-வது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது சிக்கிமின் நம்சி மாவட்டம், யான்காங் நகரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
டியோரலி நகரில் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. அந்த மருத்துவனையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். சிக்கிமின் சிர்வாணி, லோவர் சாம்டங் பகுதிகளில் தீஸ்தா நதியின் குறுக்கே புதிதாக பாலங்கள் கட்ட அவர் அடிக்கல் நாட்டினார். ஒட்டுமொத்தமாக ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டு கடந்த திங்கள் கிழமை மாலை காங்டாக்கில் தரையிறங்கினேன். சிக்கிம் மண்ணில் கால் பதித்ததும் புத்துணர்வைப் பெற்றேன். மாநிலத்தின் இயற்கை அழகு அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. காங்டாக்கின் அனைத்து சாலைகளும் தூய்மையாக காட்சியளிப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக சிக்கிம் மக்களை பாராட்டுகிறேன். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு வடகிழக்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. சிக்கிமின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். இன்றைய விழாவில் 30 திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. சிக்கிமின் சுற்றுலா துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிக்கிம் மாநிலத்தின் இயற்கை விவசாயம் ஒட்டு மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்த குழந்தையின் பெயரில் 108 மரங்கள் நடப்படுகின்றன. சிக்கிம் அரசின் இந்த திட்டம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த லட்சிய பயணத்துக்கு சிக்கிம் உறுதுணையாக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கால்பந்து விளையாடிய பிரதமர் மோடி: சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் பால்ஜோர் கால்பந்து மைதானம் அமைந்துள்ளது. இதில் இளம் வீரர்கள், வீராங்கனைகளுடன் இணைந்து பிரதமர் மோடி நேற்று காலை கால்பந்து விளையாடினார். அப்போது அவர் பந்தை கடத்திச் சென்று கோல் அடித்தார். இந்த வெற்றியை இளம் வீரர், வீரங்கனைகளுடன் சேர்ந்து அவர் கொண்டாடினார். சிறுவர், சிறுமிகளுக்கு கால்பந்துகளில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோவை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “செவ்வாய்க்கிழமை காங்டாக் மைதானத்தில் இளம் நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடினேன். நாங்கள் கற்றுக் கொண்டோம், கொண்டாடினோம், விளையாட்டை ரசித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.