‘‘சீர்திருத்தங்கள் தேசிய இயக்கமாக மாறிய ஆண்டு 2025’’ - பிரதமர் மோடி பெருமிதம்

‘‘சீர்திருத்தங்கள் தேசிய இயக்கமாக மாறிய ஆண்டு 2025’’ - பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
2 min read

புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றங்களின் அடிப்படையில், சீர்திருத்தங்கள் ஒரு தொடர்ச்சியான தேசிய இயக்கமாக மாறிய ஆண்டாக 2025 நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டு நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு, இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தியாவின் சீர்திருத்தப் பயணத்தில் 2025-ம் ஆண்டு ஒரு திருப்புமுனையான காலகட்டமாக அமைந்தது. பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி கொள்கை மாற்றங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்தி, வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தி உள்ளன.

நாட்டின் இளம் தலைமுறையினர், தொழில்முனைவோர் ஆற்றல், மக்களின் அசைக்க முடியாத மன உறுதி ஆகியவற்றின் காரணமாக இந்தியா சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறியுள்ளது. இந்தியாவின் இந்த எழுச்சி, மக்களை மையப்படுத்திய, பல்துறை சார்ந்த, வளர்ச்சி நோக்குடைய அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களில் இருந்து உருவாகிறது.

கடந்த 11 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றங்களின் அடிப்படையில், சீர்திருத்தங்கள் ஒரு தொடர்ச்சியான தேசிய இயக்கமாக மாறிய ஆண்டாக 2025 நினைவுகூரப்படும். விரைவான செயலாக்கம், ஆழமான மாற்றங்கள், எளிதாக்கப்பட்ட நிர்வாகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை இந்த ஆண்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக 5%, 18% ஆகிய இரண்டு அடுக்கு கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்துக்குப் பதிலாக, 2025-ம் ஆண்டு நவீன வருமான வரிச்சட்டம் இயற்றப்பட்டது. ரூ. 100 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், சிறு நிறுவனங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. காப்பீட்டுத் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நியாயமான ஊதியம், சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான பணியிடங்கள், பெண்களின் அதிகப்படியான பங்களிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக 29 சட்டங்கள், ஒருங்கிணைக்கப்பட்டு நான்கு நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ESIC மற்றும் EPFO ​​பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, ஓமன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், EFTA கூட்டமைப்பின் கீழ் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அணுசக்தியைப் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் விரிவுபடுத்துவதை சாத்தியமாக்குவதற்காக சாந்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், அணுசக்தி துறையில் தனியார் பங்கேற்புக்கும் புதுமைகளுக்கும் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

விக்‌ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் மூலம், கிராமப்புற வேலை வாய்ப்புக்கான நாட்கள் 100-ல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வியில் பல அமைப்புகளுக்குப் பதிலாக, ஒருங்கிணைந்த ஒற்றை உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில், கட்டுப்பாடுகளுக்குப் பதில் ஒத்துழைப்பையும், ஒழுங்குமுறைக்குப் பதில் எளிதாக்குதலையும் அரசு முன்வைத்துள்ளது.

எனவே, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்கள், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தங்கள் ஈடுபாட்டை ஆழப்படுத்த வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் வழிகாட்டும் நோக்கமாக தொடர்கிறது’’ என தெரிவித்துள்ளார்.

‘‘சீர்திருத்தங்கள் தேசிய இயக்கமாக மாறிய ஆண்டு 2025’’ - பிரதமர் மோடி பெருமிதம்
‘‘வேறு மாநிலங்களுக்கு புலம்பெயரும் மேற்கு வங்கத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்க” - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in