பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பணவீக்க உயர்வுக்கு அவர்களே பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பெங்களூருவில் பதில் அளித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விலை உயர்வை பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தால் அது புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். அவ்வாறு செய்வது தனக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
எனவேதான், தேர்தல் முடிந்த பிறகு அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டன. பாஜக அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்பதை இது காட்டுகிறது.
இந்த பிரச்சினையை நிச்சயம் நாங்கள் எழுப்புவோம். பாஜக அரசால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை எளிய மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.