

அம்மான்: பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளில் 4 நாள் பயணம் செய்வதற்காக நேற்று காலை டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். மாலையில் ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது.
இரு நாடுகள் இடையே உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தப் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைனை பிரதமர் மோடி நேற்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி, ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைன் இருவரும் பங்கேற்கின்றனர். இரு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டின் போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
இந்தப் பயணத்தில் 2-வது நாடாக 16-ம் தேதி (இன்று) எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் அபியு அகமது அலி உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி எத்தியோப்பியா செல்வது இதுவே முதல்முறையாகும்.
இறுதியாக வரும் 17-ம் தேதி ஓமன் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்து இரு தரப்பு பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகிய துறைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.