

பாமக செயல்தலைவர் ஜி.கே.மணியின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது.. படம்: எல்.சீனிவாசன்
அன்புமணியை மத்திய அமைச்சராக்க நான் பரிந்துரை செய்ததையடுத்தே ராமதாஸ் ஒப்புக்கொண்டார் என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை துரோகி என்று அன்புமணி கூறியது வேதனையாக இருக்கிறது. அன்புமணிக்கு நான் எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்தது இல்லை. அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். எனது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று தெரிவித்த ராமதாஸ், அதில் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில், அன்புமணி என்னிடம் வந்து மத்திய அமைச்சர் பதவி கேட்க சொன்னார்.
நான் ராமதாஸிடம் பேசி, ‘நீங்கள் தான் பதவிக்கு வரமாட்டேன் என்கிறீர்கள். உங்கள் மகனையாவது அமைச்சராக்கலாம்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கட்சியின் தலைவர் என்பதால் உனது விருப்பத்துக்கு செயல்படுகிறாயா. நான் செய்த சத்தியம் என்னவாகும்’ என்று என்னிடம் கடுமையாக கோபப்பட்டார். பிறகு, காடுவெட்டி குருவை அழைத்துச் சென்று மீண்டும் ராமதாஸிடம் பேசினோம். அதன் பின்னரே, அன்புமணியை அமைச்சராக்க ராமதாஸ் ஒப்புக்கொண்டார். ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக என்னை போக சொன்ன போது கூட, அன்புமணியை தான் பரிந்துரைத்தேன். அன்புமணியை தான் மாநிலங்களவை உறுப்பினராக்கினோம். பாமக தனித்து போட்டியிட்ட போது கூட, அன்புமணி தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், அன்புமணிக்கு எந்த கெடுதலும் செய்யாத என்னை பார்த்து, அப்பாவையும் என்னையும் ஜி.கே.மணி பிரித்துவிட்டார் என அன்புமணி கூறுகிறார். தந்தை - மகனை நான் எப்படி பிரிக்க முடியும். ராமதாஸும், அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் பேசியது தான், இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம். ராமதாஸை கடுமையாக அன்புமணி விமர்சனம் செய்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும். ராமதாஸுடன் நான் இருப்பதால், என்னை அன்புமணி விமர்சனம் செய்து வருகிறார். ராமதாஸ் பல முறை சிறை சென்றுள்ளார். அன்புமணி எந்த்தனை முறை சிறை சென்றார்? பாமகவில் ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் அன்புமணி மட்டும் தான். கட்சியில் பிரச்சினை இருக்கும் போது, விருப்ப மனு வாங்குவது மோசடி வேலையாகும்.
பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் தான். பாமகவில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம். ராமதாஸ் - அன்புமணி ஒன்று சேர தயார் என்றால், நான் கட்சியில் இருந்து விலகி கொள்ள தயாராக இருக்கிறேன். அன்புமணி யார், யார் துரோகிகள் என நினைக்கிறோரோ, அவர்கள் அனைவரும் பாமகவில் இருந்து விலகத் தயாராக இருக்கிறோம். ராமதாஸ் உடன் அன்புமணி இணைந்து செயல்பட வேண்டும். நானோ, என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்து விடுகிறேன். வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டோம். அவர்களாக அழைத்தால் மீண்டும் பாமகவில் இணைகிறோம்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நான் தான் கெடுத்ததாக அன்புமணி அவதூறாக பேசி வருகிறார். ஆட்சி மாற்றம் காரணமாக, அந்த இடஒதுக்கீடு கிடைக்காமல் போனது. அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸ். அன்புமணியை சமாதானம் செய்வதற்காக, தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர். இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.