

கேரள முதல்வர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை 9-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்(யுடிஎஃப்) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2016, 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2 முறையும் பினராயி விஜயனே முதல்வராக பணியாற்றினார்.
இந்த 2026 தேர்தலிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்குமா என்று கட்சித் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் ஏராளமான நலத்திட்டங்களை அமல்படுத்தி மக்களின் ஆதரவை முதல்வர் பினராயி விஜயன் பெற்றுள்ளார். இதனால் அவருக்கு மக்களிடையே ஏகோபித்த செல்வாக்கு உள்ளது.
நாட்டில் கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக இருந்து வந்தது. இந்நிலையில் 2004 மக்களவைத் தேர்தலில் 59 இடங்களில் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் வெற்றி பெற்றனர். 2009 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் 25 இடங்களையும், 2014-ல் 11 இடங்களையும், 2019-ல் 5 இடங்களையும், 2024-ல் 8 இடங்களையும் இடதுசாரிக் கட்சிகள் வென்றன.
ஆனாலும், கேரளாவில் இடதுசாரிகள் தலைமையிலான எல்டிஎஃப்-புக்கு ஆதரவு அமோகமாகவே உள்ளது. இருந்தபோதும் கேரள சட்டப் பேரவைத் தேர்தல் இடதுசாரிகளுக்கு ஒரு வாழ்வா சாவா தேர்தலாக பார்க்கப்படுகிறது என்று அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் தலைமையிலான எல்டிஎஃப் தோல்வி கண்டால், தேசிய அளவில் எந்த ஒரு மாநிலத்திலும் இடதுசாரிகளின் அரசே இல்லை என்ற நிலை உருவாகிவிடும்.
கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வி என்பது இடதுசாரி கட்சிகளுக்கு ஒரு முழுமையான அழிவை குறிக்காது என்றபோதிலும், இது நிச்சயமாக தேசிய அளவில் ஒரு பெரிய அடியாக அக்கட்சிகளுக்கு இருக்கும். ஏனெனில் இது நாடு முழுவதும் இடதுசாரிகளுக்கு மாநில அரசே இல்லாத நிலையை உருவாக்கும்.
எனவே, தேசிய அளவில் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற கப்பலை 'கடவுளின் சொந்த தேசம்' என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் தொடர்ந்து பயணிக்க வைக்குமா அல்லது இது கம்யூனிஸ்டுகளின் அரசியல் சவப்பெட்டியில் கடைசி ஆணியாக இருக்குமா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
1957-ம் ஆண்டு தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகளை தேசிய அரசியலுக்குக் கொண்டு வந்தது கேரள மாநிலம்தான். எனவே, 2026 கேரள சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் இடதுசாரிகள் தொடர்ந்து தேசிய அரசியலில் பயணிக்க முடியுமா அல்லது மூழ்கிவிடுமா என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும்.