

புதுடெல்லி: விமானிகள் பணிநேர வரம்பு விதிகளின் 2-ம் கட்ட அமலாக்கத்தின்கீழ், இண்டிகோ விமான நிறுவனத்துக்கு மட்டும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சலுகை அளித்துள்ளது. இதற்கு ‘ஏர்லைன்ஸ் பைலட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா’ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து மற்றும் தாமதத்தால் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில் விமானிகள் பணிநேர வரம்பு விதிகளை இண்டிகோ விமான நிறுவனத் துக்கு மட்டும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சலுகை அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குநரகத்துக்கு விமானிகள் சங்கம் எழுதியுள்ள கடிதம்:
எந்த விமான நிறுவனத்துக்கும் வணிக நலன்களின் அடிப்படையில் விலக்குகள், சலுகைகள் வழங்கப்படாது என்று கடந்த நவ.24-ம் தேதி நடந்த கூட்டத்தில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உறுதியளித்தது. அதற்கு மாறாக தற்போதுஇண்டிகோவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. விமானிகள் பணி நேர வரம்பு விதிகள் மனித உயிர்களை பாதுகாப்பதற்காகவே உள்ளன. இந்த வரம்புகளை தளர்த்துவது விமானிகள், பயணிகள் மற்றும் விமானங்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஆபத்தை ஏற்படுத்தும்.
இண்டிகோவுக்கு வழங்கப்பட்ட சலுகை மூலம், இரவு பணிக்கான வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டவிமானங்களின் எண்ணிக்கை 2-ல் இருந்து 4 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. வணிக நலனுக்காக பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்ககூடாது. இந்த சலுகைகளை ரத்து செய்யாவிட்டால் ஏற்படும் எந்த விபத்துக்கும், உயிரிழப்புக்கும் இயக்குநரகமே நேரடி பொறுப்பாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.