

பாட்னா: ஒரு வீடியோவில் ஒருவரின் முகத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் முகத்தை பொருத்தி ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோக்கள் (டீப்ஃபேக்) உருவாக்க முடியும். இதன் மூலம் ஒருவர் சொல்லாததை சொன்னது போலவும் செய்யாததை செய்தது போலவும் போலியாக காண்பிக்க முடியும்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை உருவாக்கி, பரப்பியதாக பிஹாரின் முசாபர்பூர் மாவட்டம், பகவான்பூரை சேர்ந்த பிரமோத் குமார் ராஜ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து முசாபர்பூர் எஸ்எஸ்பி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: இந்த போலி வீடியோ மற்றும் ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதாக ஜனவரி 2-ம் தேதி எங்களுக்கு புகார் வந்தது. மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலும், உயர்பதவி வகிப்பவர்களின் கண்ணியம், மதிப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் அவை இருந்தன. மேலும் ஜனநாயக அமைப்புகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவது, சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது அதன் நோக்கமாக தெரிந்தது.
இதையடுத்து சைபர் குற்றப் பிரிவின் சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணையில் பிரமோத் குமார் ராஜ் கைது செய்யப்பட்டார். அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முசாபர்பூர் சைபர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இவ்வாறு எஸ்எஸ்பி கூறியுள்ளார்.